சமுதாயத்தில் சமத்துவத்தை நோக்கி மாற்றங்கள் உருவாக்க Shahbaz Bhattiபாடுபட்டார் - பாகிஸ்தான் பிரதமர்
மார்ச்,08,2012. மதங்களின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள பாகிஸ்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை
நோக்கி மாற்றங்கள் உருவாக்க Shahbaz Bhatti பாடுபட்டார் என்று பாகிஸ்தான் பிரதமர் Yousaf
Raza Gilani கூறினார். 2011ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்
Bhatti கொலையுண்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில்
அவரின் நினைவாக கூட்டங்களும் ஊர்வலங்களும் மேற்கொள்ளப்பட்டன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில்
இப்புதனன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் Gilani, தன் அமைச்சரவையில்
Shahbaz Bhattiயை இணைத்தது தனக்குப் பெருமை தந்த ஒரு காரியம் என்று எடுத்துரைத்தார். பாகிஸ்தானில்
நிலவும் தேவநிந்தனை சட்டத்தில் மாற்றங்கள், Shahbaz Bhattiயைக் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும்
முழு முயற்சிகளில் இன்னும் தீவிரம், சிறுபான்மை சமுதாயங்களுக்கு சம உரிமைகள் வழங்குதல்,
கல்வித் திட்டங்களைச் சீர்திருத்துதல் என்று பல கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தின்போது பாகிஸ்தான்
அரசுக்கு விடுக்கப்பட்டது.