அறிவியலும் விசுவாசமும் ஒன்றுகொன்று முரணானது என்று நோக்கத் தேவையில்லை - வத்திக்கான்
விண்வெளி ஆய்வாளர்
மார்ச்,08,2012. அறிவியல் துணைகொண்டு விண்வெளியை படித்தது இயேசு கிறிஸ்துவை இன்னும் ஆழமாக
அறிந்துகொள்ள உதவியது என்று வத்திக்கான் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறினார். அண்மையில்
அமெரிக்காவின் டென்வர் உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வத்திக்கான் விண்வெளி
ஆய்வு மையத்தில் பணிபுரியும் இயேசுசபை அருள்சகோதரர் Guy Consolmagno பேசுகையில், அறிவியலும்
விசுவாசமும் ஒன்றுகொன்று முரணானது என்று நோக்கத் தேவையில்லை என்று எடுத்துரைத்தார். "வார்த்தை
மனுவானார்" என்ற தலைப்பில் அருள்சகோதரர் Consolmagno வழங்கிய இந்த உரையில் அறிவியல் வாதங்களின்
இறுதியில் இறைவனையும் ஒரு காரணமாகக் கருதுவதற்குப் பதில், இறைவனை விண்வெளியில் காணும்
அனைத்திற்கும் மூல காரணமாகக் காண்பதிலேயே தனக்குப் பெரும் நிறைவு கிடைத்துள்ளது என்பதைத்
தெளிவாக்கினார். 1891ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் துவக்கப்பட்ட வத்திக்கான்
விண்வெளி ஆய்வு மையமும், 1931ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பத்திநாதரால் துவக்கப்பட்ட வத்திக்கான்
வானொலியும் இயேசு சபையினர் திருப்பீடத்திற்கு செய்துவரும் இரு சிறப்புச் சேவைகளாகத் திகழ்கின்றன.