அரசின் நிதி ஒதுக்கீடுகளை உடனடியாகப் பெறும் நிறுவனங்களில் CAFODகத்தோலிக்க
அமைப்பையும் பிரித்தானிய அரசு இணைத்துள்ளது
மார்ச்,08,2012. உலகில் நடக்கும் பேரிடர்களின்போது, உடனடியாகத் துயர்துடைக்கும் பணிகளில்
ஈடுபடும் CAFOD (Catholic Agency For Overseas Development), என்ற கத்தோலிக்கப் பிறரன்பு
அமைப்பின் சேவையை, பிரித்தானிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளார். இயற்கைப்
பேரிடர்கள் நிகழ்ந்த உடன் முதல் 72 மணி நேரங்களில் அங்கு மேற்கொள்ளப்படும் உதவிகள் பல்லாயிரம்
உயிர்களைப் பாதுகாக்கும் என்று கூறிய பிரித்தானிய அரசு அதிகாரி Andrew Mitchell, இவ்வகை
உதவிகளைச் செய்வதில் CAFOD காட்டிய துரிதம் பாராட்டுக்குரியது என்று கூறினார். உலகில்
பேரிடர்கள் நிகழும்போது, பிரித்தானிய அரசின் நிதி ஒதுக்கீடுகளை உடனடியாகப் பெறும் நிறுவனங்களில்
CAFOD கத்தோலிக்க அமைப்பையும் இணைக்க பிரித்தானிய அரசு எடுத்துள்ள முடிவு, இவ்வமைப்பின்
சேவைகளைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஹெயிட்டி,
பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்த பேரிடர்களில் CAFOD
மேற்கொண்ட முயற்சிகளால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று இவ்வமைப்பின் உயர்
அதிகாரி Matthew Carter கூறினார்.