காஷ்மீர் மக்களிடையே கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்து வருகிறது
மார்ச்,06,2012. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுடன் கிறிஸ்தவ குரு ஒருவர்
இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது அப்பகுதி கிறிஸ்தவர்கள்
குறித்த சந்தேகத்தை காஷ்மீர் மக்களிடையே வளர்த்துள்ளதாக கூறினார் இந்திய கிறிஸ்தவ சபைகளின்
தேசிய அவையின் அதிகாரி ஒருவர். தென்னிந்திய திருச்சபையின் கிறிஸ்தவ குரு கன்னா என்பவர்
கைது செய்யப்பட்டு அப்பகுதியிலிருந்து இஸ்லாமிய நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்டது, கிறிஸ்தவர்கள்
மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களோ என்ற அச்சத்தை இஸ்லாமியர்களின் மனதில் வளர்த்துள்ளது என்றார்
கிறிஸ்தவ தேசிய அவையின் அதிகாரி சாமுவேல் ஜெய்குமார். இஸ்லாமிய இளைஞர்களை மதம் மாற்றியதாக
கிறிஸ்தவ குரு கன்னாவுக்கு எதிராக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின்
மீதான இஸ்லாமியர்களின் சந்தேகம் அதிகரித்துள்ளதாக உரைத்த ஜெய்குமார், கிறிஸ்தவத்தைப்
பலவந்தமாக புகுத்துவதையோ, எவரையும் ஏமாற்றி மதமாற்றுவதையோ கிறிஸ்தவ சபைகளின் இந்திய தேசிய
அவை ஒருநாளும் அங்கீகரித்ததில்லை என்றார். குரு கன்னா தவிர, மற்றொரு கிறிஸ்தவ சபை
குருவும், கத்தோலிக்க குரு ஒருவரும் காஷ்மீரை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.