தேவ அழைத்தல்களுக்கு செவிமடுப்பது குறித்து கொழும்பு கர்தினால்
மார்ச்,05,2012. பெரும்புனிதர்களுக்கு விடுத்த அதே அழைப்பை இன்று இறைவன் குழந்தைகளுக்கும்
விடுக்கிறார் என கொழும்பு பெருமறைமாவட்டத்தின் 64வது குழந்தைகள் தின கொண்டாட்டத்தில்
மறையுரையாற்றினார் கர்தினால் மால்கம் இரஞ்சித். Tewatta பசிலிக்கா பேராலயத்தில் கடந்த
சனிக்கிழமையன்று இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால்
இரஞ்சித், இறைவனின் அழைப்புக்குப் பதிலுரைத்து அவரோடு ஒன்றித்திருக்கும்போது, இறைவன்
சிறார்களின் வாழ்வில் பெரும்புதுமைகளை ஆற்றுகின்றார் என்றார். அன்னை மரியைப் போல்
சிறார்கள் ஒவ்வொருவரும் இறைத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்க, அத்தாயின் எடுத்துக்காட்டைப்
பின்பற்ற வேண்டும் என்றார் கர்தினால். கர்தினால் நிறைவேற்றிய சிறார்களுக்கான திருப்பலியில்
கொழும்பு உயர்மறை மாவட்டத்தின் புதியத் துணை ஆயர்கள் எம்மானுவேல் ஃபெர்னாண்டொ, மேக்ஸ்வெல்
சில்வா, ஓய்வுபெற்ற பேராயர்கள் ஆஸ்வால்டு கோமிஸ், நிக்கலஸ் மார்க்குஸ் ஃபெர்னான்டொ ஆகியோரும்
கலந்துகொண்டனர். இக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கத்தோலிக்கச் சிறார்களிடையே குருத்துவ
மற்றும் துறவற வாழ்வுக்கான தேவ அழைத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு துறவுச் சபைகள்
தங்கள் சபைகள் குறித்த கண்காட்சியை Tewatta பசிலிக்கா பேராலயத்தைச் சுற்றி அமைத்திருந்தன.