கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இரு நாட்டவர்கள் கூட்டுப் பிரார்த்தனை
மார்ச்,05,2012. கச்சத்தீவு புனித அந்தோணியார் மூன்று நாள் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது,
இலங்கை மற்றும் இந்திய மக்கள் ஒற்றுமையிலும் அமைதியிலும் வாழ இறைவரம் வேண்டி கூட்டுப்
பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இத்திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவில் இடம்பெற்ற
சிலுவைப்பாதையிலும் தேர்பவனியிலும் இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண
மறை மாவட்ட ஆயர் தாமஸ் சவுந்திரநாயகம் தலைமையில் நடந்த ஞாயிறு திருவிழாத் திருப்பலியில்,
திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மை குரு வின்சென்ட், சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் முதன்மை
குரு அமல்ராஜ், இராமேஸ்வரம் குரு மைக்கேல்ராஜ், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருக்கள் ஆண்டனி,
ஜஸ்டின் ஞானபிரகாசம், நெடுந்தீவு குரு அமல்ராஜ் ஆகியோருடன் இணைந்து தமிழகம் மற்றும் இலங்கையின்
பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன்
வாழ பிரார்த்தனை செய்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகி இமெல்டா சுகுமாரன், கடற்படை
தளபதி ரவிவிஜய குணரத்னே, இராணுவத் தளபதி மகேந்திர சதுரசிங்கே உட்பட இலங்கை அதிகாரிகள்
பலரும் இத்திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.