இலங்கையில் காவல்துறையின் வன்முறைக்குப் பலியானவர்களுக்கு ஆதரவாக மாதந்தோறும் அமைதிப்
போராட்டம்
மார்ச்03,2012. இலங்கையின் Katunayake வில் கடந்த ஆண்டு மே 30ம் தேதி காவல்துறைக்கும்
தொழிலாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதல்கள் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று கத்தோலிக்கக் குருக்களும் மனித
உரிமை ஆர்வலர்களும் பொது இடத்தில் கூடி அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்மோதலில்
21 வயது Roshen Chanaka என்ற இளம் தொழிலாளி கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர். காவல்துறையின்
இவ்வன்முறைக்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் இவர்கள் தொடர்ந்து போராடி
வருகின்றனர். Roshen Chanaka கொல்லப்பட்டதையடுத்து, அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷாவும்
காவல்துறையும் 30 இலட்சம் ரூபாயை அவரது குடும்பத்துக்குக் கொடுத்துள்ளனர். ஆனால், அக்குடும்பத்தினருக்கு
வேலை கொடுக்கவும், அவர்களது வீட்டைக் கட்டி முடிக்கவும் உதவுவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி
நிறைவேற்றப்படவில்லை என்று அக்குடும்பத்தினர் குறை கூறுகின்றனர்.