புனித பூமியின் சார்பில் உலக ஆயர்களூக்கு கர்தினால் சாந்த்ரியின் கடிதம்
மார்ச்,01,2012. செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் புனித பூமிக்கு ஆதரவான கத்தோலிக்க
திருஅவையின் உணர்வுகளைத் தட்டி எழுப்பவேண்டிய நேரம் இது என உலகின் ஆயர்களுக்கு, திருப்பீடத்தின்
கீழைரீதி திருப்பேராயத் தலைவர் கர்தினால் லியனார்தோ சாந்த்ரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். புனித
பூமியிலும் அதையொட்டிய பகுதிகளிலும் வாழும் தலத் திருஅவைகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில்
புனித வெள்ளியன்று நிதி திரட்டப்படுவதையொட்டி ஆயர்களுக்கு செய்தி அனுப்பியுள்ள கர்தினால்
சாந்த்ரி, எருசலேம், இஸ்ராயேல், பாலஸ்தீனம் மற்றும் யோர்தான், சிரியா, லெபனன், சைப்ரஸ்,
எகிப்து ஆகிய பகுதிகளின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டிய உலக ஆயர்களின் கடமையைச்
சுட்டிக்காட்டியுள்ளார். புனிதபூமிப் பகுதியில், குறிப்பாக சிரியாவிலும், எருசலேமிலும்
இடம்பெறும் பதட்டநிலைகள் குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் சாந்த்ரி,
மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் தேவையை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஆண்டு
புனித பூமி பகுதியில் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது, துறவு இல்லங்கள் கட்டப்பட்டது,
பல்கலைக்கழக மாணவர்களின் படிப்புக்கென நிதியுதவிகள் வழங்கப்பட்டது, சிறுவர்களுக்கு கல்வி
உதவி வழங்கியது, விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டது, பள்ளிகள் கட்டப்பட்டது, ஏழைகளுக்கு
வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை, புனித பூமி பகுதிக்குப்
பொறுப்பாயிருக்கும் பிரான்சிஸ்கன் துறவு சபை வெளியிட்டுள்ளது.