2012-03-01 15:27:27

திருத்தந்தையின் மூத்த சகோதரர் எழுதியுள்ள புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது


மார்ச்,01,2012. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் தனக்குள்ள உறவை விவரித்து, திருத்தந்தையின் மூத்த சகோதரர் பேரருள் தந்தை Georg Ratzinger எழுதியுள்ள ஒரு புத்தகம் மார்ச் 1ம் தேதி, இவ்வியாழனன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
"என் சகோதரர், பாப்பிறை" “My Brother the Pope” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் இந்த நூல், Michael Hesemann என்ற ஜெர்மன் நாட்டு எழுத்தாளர், அருள்தந்தை Georg Ratzinger அவர்களுடன் மேற்கொண்ட பல நேர்காணல்களின் தொகுப்பாக சென்ற ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியாகியிருந்தது.
இயேசு சபையினரால் நடத்தப்படும் இக்னேசியஸ் அச்சகம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் தனி உரிமை பெற்ற ஓர் அச்சகம். இவ்வச்சகத்தின் மற்றுமொரு நூலாக Georg Ratzinger எழுதிய "என் சகோதரர், பாப்பிறை" இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
1927ம் ஆண்டு பிறந்த திருத்தந்தை தனக்கு மூன்றாண்டுகள் முன்பு பிறந்த Georg பற்றி பல நேரங்களில் தன் உரைகளில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது அண்ணன், பல வழிகளிலும் தனக்கு நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்று திருத்தந்தை இவரைக் குறித்து பேசியுள்ளார்.
1924ம் ஆண்டு பிறந்த Georg Ratzinger, குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவரும், தன் தம்பி Joseph Ratzinger உடன் இணைந்து, 1951ம் ஆண்டு திருநிலைபடுத்தப்பட்டார். இசையில் அதிக ஈடுபாடு கொண்ட Georg, தன் வாழ்வின் 30 ஆண்டுகளைப் புகழ்பெற்ற “Regensburger Domspatzen” என்ற இசைக்குழுவை வழிநடத்துவதில் கழித்தார். அதே வேளையில், Joseph Ratzinger தன் வாழ்வை இறையியலைப் படிப்பதிலும் கற்றுத்தருவதிலும் செலவிட்டார்.
குருத்துவப் பயிற்சியாளராக பல ஆண்டுகள் உழைத்தாலும், திருத்தந்தையின் மனம் எல்லாம் மேய்ப்புப் பணியில் அதிகம் ஈடுபட்டிருந்தது என்பதை "என் சகோதரர், பாப்பிறை" என்ற புத்தகத்தின் 7வது பிரிவில் விளக்கியுள்ளதாக, Georg Ratzinger, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.