இஸ்ரேல் நாட்டின் அழைப்பின்பேரில், புனித பூமியில் இந்தியத் திருஅவையின்
தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள்
மார்ச்,01,2012. புனித பூமியில் இந்தியர்கள் திருப்பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வத்தைத்
தூண்டும் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாத் துறை விடுத்த அழைப்பின்பேரில்,
இந்தியத் திருஅவையின் தலைவர்கள் இஞ்ஞாயிறு முதல் வியாழன் வரை அந்நாட்டில் பேச்சுவார்த்தைகள்
மேற்கொள்ளச் சென்றனர். இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்,
அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட சீரோமலபார் திருஅவைத் தலைவர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா
மற்றும் டாமன் தலைமைப் பேராயர் Felipe Neri Serrao, திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம்
ஆகியோர் உட்பட பல கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களையும், இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின்
தலைவர்களையும் இஸ்ரேல் நாடு அழைத்திருந்தது. இயேசு பாடுபட்டு இறந்த கல்வாரிக் குன்று,
அவரது கல்லறை, மற்றும் அவர் இரவு உணவு நடத்திய அறை ஆகிய அனைத்தையும் தரிசித்த இக்குழுவினர்,
ஒரு சில யூத வழிபாட்டு தலங்களையும் பார்வையிட்டனர். இக்குழுவினர் இஸ்ரேல் அரசுத் தலைவர்களுடனும்,
மற்ற யூத மதத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து
புனித பூமிக்கு ஆயிரக்கணக்கனோர் ஒவ்வோர் ஆண்டும் புனித பயணங்களை மேற்கொள்வதால், அந்தப்
பழக்கத்தை இன்னும் தீவிரப்படுத்தும் திட்டங்கள் இந்தக் குழுவினர் மேற்கொண்ட பயணத்தில்
விவாதிக்கப்பட்டதெனத் தெரிகிறது.