அணுசக்திச் சோதனைகள் அனைத்தையும் வடகொரிய அரசு நிறுத்திவைக்கப் போவதாக அறிவிப்பு
மார்ச்,01,2012. வடகொரியாவும், அமெரிக்க ஐக்கியநாடும் அண்மையில் Beijing நகரில் மேற்கொண்ட
பேச்சுவார்த்தைகள் நேர்மறையான, நடைமுறைக்கேற்ற விளைவுகளைத் தந்திருப்பது குறித்து தன்
மகிழ்வை வெளியிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன். Uranium உலோகத்தின் பரிசோதனைகள்,
மற்றும் அணுசக்திச் சோதனைகள் அனைத்தையும் தனது அரசு நிறுத்திவைக்கப் போவதாகவும், தங்களது
அணுசக்தி செயல்பாடுகளை சர்வதேச கண்காணிப்புக் குழு பார்வையிட அனுமதிப்பதாகவும் வடகொரிய
அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இப்புதனன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும்,
வடகொரியாவுக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தன் அணுசக்தி
செயல்பாடுகளை நிறுத்திவைக்கப் போவதாக வடகொரியா அறிவித்துள்ளதை தென்கொரியா மகிழ்வுடன்
வரவேற்றுள்ளது. வடகொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத்
தொடர்ந்து, வடகொரியாவுக்கு 2,40,000 டன் அளவில் உணவுப் பொருட்களை வழங்க அமெரிக்க ஐக்கிய
நாடு முன்வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு, வடகொரியாவில் உணவின்றி வாடும் பல்லாயிரம்
மக்களின் துயர் துடைக்கும் ஒரு முக்கிய முடிவு என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்
தெரிவித்தார்.