நகரங்களில் பல கோடி குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் இன்றி வாடும் நிலை அதிகரித்துள்ளது
- ஐ.நா. அறிக்கை
பிப்.29,2012. நகரங்களில் வளரும் பல கோடி குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் இன்றி, வறுமையில்
வாடும் நிலை அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது. குழந்தைகளின்
கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள UNICEF என்ற ஐ.நா. அமைப்பு,
‘2012ம் ஆண்டில் உலகக் குழந்தைகளின் நிலை’ என்ற அறிக்கையை இச்செவ்வாயன்று வெளியிட்டது.
இந்த அறிக்கையில் நகர் வாழ் குழந்தைகளின் பிரச்சனைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. நலவாழ்வுக்கு
எதிராக, மிகவும் மோசமானச் சூழல்களில் குழந்தைகள் வாழ்வதால், நோய்கள் எளிதில் அவர்களைத்
தாக்குவதாகவும், இந்த நோய்களில் பல அவர்கள் வாழ்வு முழுவதும் பாதிப்புக்களை உருவாக்குவதாகவும்
இவ்வறிக்கை விவரிக்கிறது. உலகின் பல நகரங்களில் தற்போது வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை
100 கோடி என்று கூறும் இவ்வறிக்கை, இக்குழந்தைகளில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை
வசதிகள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. நலவாழ்வு கிட்டாமல் வாடும் இக்குழந்தைகளில்
பல கோடி பேர், அடிப்படை கல்வி வசதிகளும் இல்லாமல் வாழ்கின்றனர் என்று இவ்வறிக்கை மேலும்
கூறுகிறது.