கோவாவில் அருட்பணியாளர், மற்றும் 1500 கத்தோலிக்கர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு
பிப்.27,2012. காவல்துறை குழு ஒன்றை கொலைச் செய்ய முயற்சித்ததாக அருட்பணியாளர் ஒருவர்
மீதும், ஏறத்தாழ 1500 கத்தோலிக்கர்கள் மீதும் வழக்கு ஒன்றைப் பதிவுச் செய்துள்ளது கோவா
காவல்துறை. ஏற்கனவே தவறான தகவலின் அடிப்படையில் வெலிம் நகர் புனித பிரான்சிஸ் சேவியர்
பங்குத்தளத்தில் சோதனை நடத்தி பின்னர் மன்னிப்பு கேட்ட வரிவிதிப்புத்துறையின் செயலால்
கோபமுற்றிருந்த மக்கள், சனியன்று இரவு அப்பங்குதளத்தில் புகுந்த காவல்துறை குழு ஒன்றைத்
தாக்கியுள்ளது. ஐந்து காவல்துறையினரும் ஒரு பொதுநிலையினரும் படுகாயமுற்ற நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பங்குத்தள குரு மீதும் ஏறத்தாழ
1500 பங்குதள மக்கள் மீதும் கொலைமுயற்சி வழக்கொன்றைப் பதிவுச் செய்துள்ளது கோவா காவல்துறை. கோவா
தலைநகர் பனாஜிக்கு அருகேயுள்ள வெலிம் பங்குதளக்குரு ரொமானோ கொன்சால்வசை சனி இரவு 9மணிக்கு
மேல் சந்திக்க வந்த இந்த காவல்துறை குழு, அந்த பங்குதள மக்கள், வரும் மார்ச் 3ந்தேதி
தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பதை அறிய விரும்பியதாகவும் அதனைத்
தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றதாகவும் அந்த பங்குத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.