2012-02-23 15:10:26

திருநீற்றுப் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட வழிபாட்டு ஊர்வலம், திருப்பலி


பிப்.23,2012. மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தும் ஓர் அடையாளமாகவும், அதே நேரம், நம்மில் தவம், தாழ்ச்சி உருவாக வேண்டிய ஓர் அழைப்பையும் திருநீற்று புதனும், அன்று நம்மீது பூசப்படும் சாம்பலும் நமக்குத் தருகின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று மாலை உரோம் நகரில் உள்ள L'Aventino குன்றில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் பேராலயத்திலிருந்து புறப்பட்ட ஓர் வழிபாட்டு ஊர்வலத்தை முன்னின்று நடத்திய திருத்தந்தை, புனித சபீனா பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
"நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்று திருநீற்றுப் புதனன்று கத்தோலிக்கத் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை, இந்த விவிலிய வார்த்தைகள் நம்மில் நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்குவதற்குப் பதில், நமது நிலையற்றத் தன்மையையும், அதனை மாற்றவல்ல இறைவனின் அருகாமையையும் நமக்கு உணர்த்தவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மண் என்ற அடையாளம் அழிவைக் குறிப்பதாகத் தெரிந்தாலும், நம்மில் ஒருவராய்ப் பிறந்து, இறந்து புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்த கிறிஸ்துவின் வழியாக, இந்த மண்ணும் உயிர் தரும் சக்தி பெறுகின்றது என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
1979ம் ஆண்டு அருளாளர் இரண்டாம் ஜான் பால் தவக்காலத்தின் முதல் நாளன்று, விசுவாசிகளுடன் வழிபாட்டு ஊர்வலமாய் நடந்து சென்று திருப்பலி ஆற்றி வந்தார். அவர் துவக்கி வைத்த இந்த வழக்கத்தைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் ஒவ்வோர் ஆண்டும் பின்பற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.