திருத்தந்தை: நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் அன்பு எனும் சங்கிலி
நமக்கு விடுதலையைத் தருகிறது
பிப்.23,2012. "புனித பவுல் அடியார் கிறிஸ்துவுக்காகச் சிறைக்கைதியாகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டார்"
என்ற வார்த்தைகளை மையமாக வைத்து, உரோம் மறைமாவட்டக் குருக்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் தன் மறைமாவட்டக் குருக்களைச் சந்தித்து
உரைவழங்கும் திருத்தந்தை, இவ்வியாழனன்று அவர்களைச் சந்தித்தபோது, புனித பவுல் அடியார்
இயேசுவுக்காகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டது என்பது இயேசுவின் பாடுகளுடன் அவர் கொண்ட
ஒன்றிப்பின் துவக்கத்தைக் காட்டி நிற்கிறது என்று கூறினார். இது பாடுகளுடன் மட்டுமல்ல,
உயிர்ப்போடும், அதாவது, புதிய வாழ்வோடும் ஒன்றித்திருப்பதைக் காட்டுவதோடு, நம் துன்பங்களையும்,
சோதனைகளையும் இறைவன் பெயரால் ஏற்கவேண்டியதையும் வலியுறுத்தி நிற்கிறது என்றார் திருத்தந்தை. நம்மைக்
கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் அன்பு எனும் சங்கிலி நமக்கு விடுதலையைத் தருகிறது என்று
கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு குருவும் தன் அழைப்பின் ஆழத்திற்குச் சென்று, இறைகுரலுக்குச்
செவிமடுத்து, அதே பாதையில் மற்றவர்களை வழிநடத்துபவர்களாகச் செயல்பட வேண்டும் என்று குருக்களிடம்
அழைப்பு விடுத்தார். தாழ்ச்சியுடைமை பற்றியும், விசுவாசம் குறித்தும் மேலும் எடுத்துரைத்தத்
திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டில் திருஅவையின் மறைகல்வியை நடைமுறைப் படுத்துவதிலும்
உண்மையை வாழ்வதிலும் குருக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.