சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது
கிறிஸ்தவர்களே - பேராயர் Antoine Audo
பிப்.23,2012. மனதளவிலும் சமுதாய நிலையிலும் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாழ்வது கிறிஸ்தவர்களே
என்றும், சூழ்ந்துள்ள வன்முறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒன்றே கிறிஸ்தவர்களின் வழி
என்றும் கூறினார் சிரியாவின் ஆயர் ஒருவர். கடந்த சில மாதங்களாக சிரியாவில் நடைபெற்று
வரும் உள்நாட்டுப் போரில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களே என்று கூறிய
Melkite ரீதி பேராயர் Antoine Audo, கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு ஓடிச்செல்வது, அந்நாட்டில்
தலத் திருஅவை தொடர்ந்திருப்பதை பெருமளவில் பாதித்துள்ளது என்று கூறினார். போரில் ஈடுபட்டுள்ளோர்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்று இரு வாரங்களுக்கு முன், திருத்தந்தை தன் மூவேளை
செப உரையில் விடுத்த அழைப்பை சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Audo, பேச்சுவார்த்தை முயற்சிகளில்
கிறிஸ்தவர்கள் ஒரு பாலமாக அமைய முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். சிரியாவில்
செயல்படும் காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பல்வேறு பணிகளைப் பற்றி குறிப்பிட்ட பேராயர்
Audo, இவர்களது பணிகளாலேயே முதியோரும், நலம் இழந்தோரும் உதவிகள் பெற முடிகிறதென்று எடுத்துரைத்தார்.