இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
பிப்.23,2012. நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை, தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக
இந்திய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். ஆய்வுக் குழுவினரின் இந்த அரிய கண்டுபிடிப்பை
உலக ஆய்வாளர்கள் பலர் புகழ்ந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நிலத்திலும் நீரிலும்
வாழும் கால்களற்ற உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக,
இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான
மையத்தின் பேராசிரியர் டாக்டர் S.D.Biju தெரிவித்துள்ளார். இவை செஸிலியன் குடும்பத்தைச்
சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள்,
கால்களற்ற வேறு ஒன்பது வகையான நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடப்பட்ட பின்னரே, இவை
முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர். இவை
முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை மரபணுச் சோதனைகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்று
கூறப்படுகிறது. முதல் முறையாக பார்க்கும் போது புழுக்களை போன்றே தோன்றும் இவை, காடுகளிலுள்ள
ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை. ஆப்பிரிக்க கண்டத்தில்தான் இந்த புதிய உயிரினங்களின்
நெருங்கிய உறவுகள் வாழ்வதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செஸிலியன்கள் மிகவும்
இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழேயே வாழ்பவை என்பதால்
அவற்றை கண்டுபிடிப்பதே பெரும் சவாலான ஒரு செயல் எனவும் டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார். இந்தியாவின்
வடகிழக்கிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, பல
பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் ஈரமண்ணை தோண்டி ஆய்வுகளை மேற்கொள்ளும் களப்பணி நடைபெற்றதாகவும்,
அதன் விளைவே இந்தக் கண்டுபிடிப்பு எனவும் இதில் ஈடுபட்டிருந்த அறிவியல் குழுவினர் கூறியுள்ளனர். இந்தப்
புதிய உயிரினத்துக்கு உள்ளூர் பழங்குடி இனத்தவர்களின் காரோ மொழியில் இது அழைக்கப்பட்ட
சிக்கிலிடே என்ற பெயரையே கண்டுபிடிப்பு குழுவினர் வைத்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு
காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான
உயிரினங்களை காப்பாற்ற வேண்டிய சவால் தங்களை கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.