மெக்சிகோவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது
பிப்.22,2012. மெக்சிகோ நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை
பெருமளவில் உயர்ந்துள்ளது என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. சமுதாய
முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் CEIDAS என்ற நிறுவனம் 2001 முதல் 2010
ஆண்டு வரையிலான ஆய்வை மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தப் பத்து ஆண்டுகளில் மெக்சிகோவில்
உணவு பற்றாக்குறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 85,343 என்றும், இதே கால அளவில் போதைப்
பொருள் வன்முறைகளால் இறந்தோரின் எண்ணிக்கை 49,804 என்றும் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவில்
வாழும் மக்களில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் அடிப்படை உணவுப் பொருட்களை வாங்கும் வசதியில்லாமல்
உள்ளனர் என்று CEIDAS நிறுவனத்தின் இயக்குனர் Mario Luis Fuentes, இவ்வறிக்கையை வெளியிட்டபோது
கூறினார். சமுதாய முன்னேற்றம் என்பது சமத்துவத்தை நிலை நாட்டும் முயற்சிகளை அடிப்படையாகக்
கொண்டு செயல்பட வேண்டும் என்று Fuentes வலியுறுத்திக் கூறினார்.