2012-02-22 15:40:44

பிப்ரவரி 22, 2012. கவிதைக் கனவுகள்............. கனவுகள் கற்பனையல்ல


கலைந்து போகும் கனவுகள்
மறைந்து போகும் மாயங்களாய்
மன மயானங்களில் எரிகின்றன.
மீண்டும் மூளைத்தொட்டிலில்
சிணுங்குகின்றன.

கச்சாப்பொருளேத் தேவையின்றி
மனங்களைக் கட்டுப்படுத்தும் கனவுகள்
பூஜ்யத்திலிருந்து இராஜ்யத்தை ஆளுகின்றன.
கனவுகள் ஓய்வெடுப்பதில்லை,
வெற்றிடமாவதில்லை.

கனவுகளைக் கற்பனையாக்க வேண்டாம்.
கற்பனைகள் காவியங்களாகின்றன,
கனவுகளே சரித்திரமாகின்றன.
கற்பனைகள் காவியமாக,
கற்பனைகள் வெற்றியடைய,
கனவுகள் தேவை

நனவுலகின் இயலாமைகளை,வெற்றிடங்களை
கனவுகளாலேயே நிரப்புகிறோம்.
நிழலுக்கு நிறமூட்டுவது கற்பனை.
நிலவிலேயே கால்பதிப்பது கனவு.
கற்பனை காலத்தால் அழியும்,
கனவுகளோ காலங்களை உருவாக்கும்.
கற்பனை வெற்றுரு எனில், உயிர் கொடுப்பது கனவே.

காந்தி கண்டது சுதந்திரக் கனவு.
கனவு காணுங்கள்.
கனவுகளை விதையுங்கள், சாயம்பூசுங்கள்.
நன்மை துளிர்விடும் கனவுகள் தேவை.
பலன்நிறை கனவுகளை நனவாக்கத் தெரியும்
மனிதர்கள் தேவை.
கலாம் கண்ட கனவைக் காணுங்கள்
நல்கனவுகளின் காரணமாய்
பல காந்திகளும் கலாம்களும் பிறக்கட்டும்.








All the contents on this site are copyrighted ©.