2012-02-21 15:07:36

பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதர் - திருஅவை பெரும் மகிழ்ச்சி


பிப்.21,2012. திருநிலை பெறாத பொதுநிலையினர் ஆசியத் திருஅவையில் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் அருளாளர் Pedrom Calungsod பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதராகப்போகும் அறிவிப்பு அமைந்துள்ளது என்று Lipa பேராயர் Ramon Arguelles கூறினார்.
வருகிற அக்டோபர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனிதர் நிலைக்கு உயர்த்தப்போவதாக இச்சனிக்கிழமை அறிவித்துள்ள எழுவரில் அருளாளர் Calungsodம் ஒருவர் என்ற செய்தியைப் பிலிப்பின்ஸ் திருஅவை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் Calungsod தன் பரிந்துரையால் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு அமைதியையும், ஒருங்கிணைப்பையும் மென்மேலும் கொணர்வார் என தான் நம்புவதாக Cebu உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo Vidal, Facebookல் செய்தி வெளியிட்டுள்ளார்.
பிலிப்பின்ஸ் நாட்டிற்கு இரண்டாவது புனிதர் வரவிருப்பது பெரும் மகிழ்வை அளிக்கிறது என்றும், இவ்விருவருமே பொதுநிலையினர் என்பது மேலும் மகிழ்வான ஓர் அம்சம் என்றும் Malolos ஆயர் Jose Oliveros கூறினார்.
1654 ம் ஆண்டு பிறந்த அருளாளர் Calungsod, இயேசு சபையினர் நடத்திவந்த பள்ளியில் கல்வி பயின்று, மறைகல்வி புகட்டும் ஆசிரியப் பணியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார். மிக இளவயதிலேயே இயேசுசபை மறைப்பணியாளர்களுடன் இணைந்து Marianas தீவுகளில் உழைத்த Calungsod, தனது 18வது வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு இவரை அருளாளராக உயர்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.