புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசத்திற்கும் பிறரன்புக்கும் இடையேயான நெருங்கியத்
தொடர்பை வலியுறுத்துகிறார் திருத்தந்தை
பிப்.16,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் விசுவாசத்திற்கும் பிறரன்புக்கும்
இடையேயான நெருங்கியத் தொடர்பை உணர்ந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒருவர் ஒருவரிடையேயான ஒன்றிப்பிலும், மேய்ப்புப்பணி ஒத்துழைப்பிலும்
ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து, அவ்விரு கண்டங்களிலும் புதிய நற்செய்தி
அறிவிப்பு குறித்து ஆலோசித்த உரோமைக் கூட்டத்திற்கு பின் அந்த ஆயர் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று
திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 2004ம் ஆண்டு இடம்பெற்ற முதல் கூட்டத்திற்குப்
பின், கடந்த ஏழு ஆண்டுகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தன் பாராட்டுக்களையும்
நன்றியையும் வெளியிட்டார். இன்றைய நவீன உலகில் காணப்படும் மதம் குறித்த பாராமுகம்,
மேலோட்டமான பக்தி முறைகள், உண்மைகளை எதிர்கொள்ளும் தயக்கம், கிறிஸ்தவ விரோதப் போக்கு,
உலக சிற்றின்பங்களே பெரிதென எண்ணும் மனநிலை, குடும்ப அமைப்புகளில் மதிப்பீடுகள் குறித்த
நெருக்கடி, கீழ்த்தரமான பாலின இலக்கியங்கள் மற்றும் பரத்தமை போன்ற சமூக பதட்டநிலைகளின்
அடையாளங்கள் குறித்து தன் உரையில் கவலையை வெளியிட்ட பாப்பிறை, இத்தகைய போக்குகள் மனந்தளர்ச்சிக்கு
வித்திடாமல், நம்பிக்கையுடன் கூடிய பணிக்கான அர்ப்பணத்தை புதுப்பிப்பதற்கு காரணமாக இருக்கவேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார். குடும்பங்கள், கலாச்சாரங்கள் போன்றவைகளில் நுகர்வுக் கலாச்சாரம்
ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார் அவர். விசுவாசத்தால் ஊட்டம்பெறும்
கலாச்சாரத்தினால் மனித குலத்திற்கு உண்மையான சேவையாற்ற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி,
தேவஅழைத்தல்களை ஊக்குவிப்பதிலும் புதிய நற்செய்தி அறிவிப்பை எடுத்துச் செல்வதிலும் ஒவ்வொரு
கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.