பாகிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் சேர விழையும் கிறிஸ்தவ மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்
பிப்.16,2012. பாகிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் சேர விழையும் கிறிஸ்தவ மாணவர்கள் பாகுபாட்டுடன்
நடத்தப்படுகின்றனர் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு
கூறியுள்ளது. உயர்கல்வி பயில நுழைவுத் தேர்வுகளுக்குச் செல்லும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு
குரான் பற்றிய தகவல்கள் தெரியாததால், அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்றனர் என்றும்,
உயர்கல்வி படிப்பதற்கு குரான் பற்றிய அறிவு தேவை என்று வற்புறுத்துவது நீதியல்ல என்றும்
இப்பணிக் குழு லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. Aroon Arif என்ற
கிறிஸ்தவ மாணவர் மருத்துவப் படிப்பிற்கென எழுதிய நுழைவுத் தேர்வில் அதிக அளவு மதிப்பெண்கள்
பெற்றிருந்தார் எனினும், மற்ற இஸ்லாமிய மாணவர்கள் குரான் நூலைப் பற்றிய பகுதியில் கூடுதலாக
20 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதால் கிறிஸ்தவ மாணவருக்கு படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஒரு
குழந்தையை மத நம்பிக்கையில் வளர்ப்பது ஒவ்வொரு குடும்பத்தையும், மத நிறுவனங்களையும் சார்ந்த
கடமை என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் மத அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவது சரியல்ல
என்றும் லாகூர் கிறிஸ்தவ சபையின் ஆயர் Alexander John Malik, கூறினார். அரசின் கல்வித்
துறையில் மத அடிப்படையில் பாகுபாடுகள் நீக்கப்பட்டு, மனித விழுமியங்களை அடிப்படையாகக்
கொண்ட கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதி மற்றும் அமைதிக் குழு தன்
வழக்கைப் பதிவு செய்துள்ளது.