உரோம் திருஅவையின் விசுவாசம் பற்றியும் பேசப்படும் என நம்புவோம் - திருத்தந்தை
பிப்.16,2012. இக்காலத்திய உணர்வுகளிலும் சமுதாயத்தின் பொதுவான கருத்துக்களிலும் தங்களை
முடக்கிவிடாமல் தங்களது வாழ்க்கையில் இறைவனின் விருப்பத்தை நேர்மையாகத் தேர்ந்து தெளிந்து
வாழுமாறு உரோம் குருத்துவ மாணவர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். “நம்பிக்கையின்
அன்னைமரி” விழாவை முன்னிட்டு, அவ்வன்னைக்கு அர்ப்பணிக்கப்ப்டடுள்ள உரோம் குருத்துவக்
கல்லூரிக்கு இப்புதன் மாலை சென்று, குருத்துவ மாணவர்களுடன் lectio divina என்ற இறைவார்த்தை
விளக்கம் மற்றும் திருநற்கருணை ஆராதனை திருவழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றிய
திருத்தந்தை இவ்வாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். “சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை
முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு” (உரோ.12:1) என்று புனித பவுல் உரோமையருக்கு
எழுதிய திருமடலின் திருச்சொற்களை மையமாக வைத்து இம்மறையுரையை வழங்கினார் திருத்தந்தை. புனித
பவுலின் இவ்வார்த்தைகள், எல்லாக் காலத்திலும் வாழ்கின்ற உரோமையர்களிடம் பேசுவதாக இருக்கின்றன
என்ற திருத்தந்தை, இன்று திருஅவை பற்றி, இத்திருஅவை எப்படி இருக்கின்றது என்பது பற்றி
இப்போது சிந்திப்போம் என்றும் கூறினார். புனித பவுலின் இவ்வார்த்தைகள், அறநெறி வாழ்வுக்கான
வெறும் அழைப்பாக இல்லாமல், அவ்வாழ்வுக்கான நல்அறிவுரையாகவும் இருக்கின்றன என்றும் அவர்
கூறினார். பணம் மற்றும் ஊடகத்தின் வல்லமை பயனுள்ளவை, ஆனால் அவை எளிதில் மனிதனுக்கு
எதிரானவையாக மாறக்கூடும், பணஉலகம், மனிதன்மீது அதிகாரம் செலுத்தக் கூடும் என்று எச்சரித்த
திருத்தந்தை, இவ்வுலகின் போக்கின்படிச் செல்லாமல் இருக்கக் கேட்டுக் கொண்டார். நம்மை
இறைவன் உண்மையிலேயே புதிய மனிதர்களாக்குவதற்கு நாம் அவரை நம் வாழ்வில் அனுமதிப்பதற்கு
நம்பிக்கையின் அன்னைமரி நமக்கு உதவுவாராக என்றும் கூறி இம்மறையுரையை நிறைவு செய்தார்
திருத்தந்தை. நம்பிக்கையின் அன்னைமரி விழாவன்று உரோம் குருத்துவக் கல்லூரிக்குச் சென்ற
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பாலைப் பின்பற்றி, திருத்தந்தை 16ம் பெனடிக்டும் அவ்விழா
நாளில் அங்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.