அருள்பணியாளர்களின் சேவையை உலக சக்திகள் கட்டுப்படுத்த முடியாது - கத்தோலிக்கத் தலைவர்
ஜான் தயாள்
பிப்.16,2012. தான் கத்தோலிக்கத் திருஅவைக்குத் திரும்பி வருவதற்கு, நல்ல மனமும், பணிவும்
கொண்ட புனிதமான அருள்பணியாளர்களே காரணமாக இருந்தனர் என்று இந்திய கத்தோலிக்கத் தலைவர்
ஒருவர் கூறினார். கடந்த மூன்று நாட்களாக மும்பையில் நடைபெற்ற மறைமாவட்டக் குருக்கள்
தேசிய அவையின் ஆண்டுக் கூட்டத்தில் அருள்பணியாளர்களுக்கு உரை வழங்கிய அனுபவம் மிக்கச்
செய்தியாளரும், அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலருமான ஜான் தயாள் இவ்வாறு
கூறினார். கத்தோலிக்கத் திருஅவையில் காணப்படும் அருள்பணியாளர்கள் என்ற அமைப்பு, கடவுளுக்கும்,
மனிதர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி புரிவதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனித்துவம் மிக்கதொரு
அமைப்பு என்று கத்தோலிக்கத் தலைவர் ஜான் தயாள் கூறினார். அருள்பணியாளர்கள் தாங்களாகவே
முன்வந்து இந்தப் பணியை மேற்கொள்வதால், அவர்களது தனிப்பட்டச் சேவையை உலக சக்திகள் கட்டுப்படுத்த
முடியாது என்று ஜான் தயாள் எடுத்துரைத்தார். இந்தியத் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும்,
பங்குத் தளமும் புதிய நற்செய்திப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்திட்டங்களை
வகுக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர் ஜான் தயாள் கேட்டுக் கொண்டார்