மனித உயிரை மதிக்காத அரசின் முயற்சிகளை விசுவாசிகள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - Costa
Rica ஆயர்கள்
பிப்.15,2012. கருகலைப்பு மற்றும் ஓரினத் திருமணம் ஆகியவற்றை சட்டமயமாக்க Costa Rica
நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகள் மனித உயிரை மதிக்காத ஒரு போக்கு என்றும், இம்முயற்சிகளை
விசுவாசிகள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றும் அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அண்மையில்
Costa Ricaவின் ஆயர்கள் பேரவை நடத்தி முடித்த ஆண்டு கூட்டத்தின் இறுதியில் ஆயர்கள் வெளியிட்ட
அறிக்கையில், அரசு மேற்கொண்டு வரும் இம்முயற்சிகள் மக்கள் வாழ்வை எவ்வகையிலும் மேம்படுத்தப்போவதில்லை
என்பதைத் தெளிவுபடுத்தினர். தனி மனித உயிர், இயற்கைவழி அமையும் குடும்பம் ஆகியவற்றின்
அடிப்படையில் எழுப்பப்படும் ஒரு சமுதாயமே உறுதியாக இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூறிய
ஆயர்கள், இந்த நன்னெறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் தங்கள் எதிர்ப்பு
உண்டு என்பதை எடுத்துரைத்தனர். பள்ளிகளில் சொல்லித் தரப்படும் பாலியல் கல்வியில் காணப்படும்
குறைகளைச் சுட்டிக் காட்டிய ஆயர் பேரவையின் இவ்வறிக்கை, வளரும் தலைமுறைக்கு நன்னெறிகளை
தகுந்த முறையில் கற்றுத்தருவது இன்றைய தலைமுறையின் முக்கிய கடமை என்பதையும் கூறியது. மார்ச்
மாதத்தில் திருத்தந்தை மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளில் மேற்கொள்ளும் திருப்பயணம் லத்தீன்
அமெரிக்க நாடுகள் அனைத்திற்குமே ஓர் ஆன்மீக மறுமலர்ச்சியாக அமைய வேண்டும் என்று ஆயர்கள்
தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.