2012-02-15 15:36:01

கடந்த 30 ஆண்டுகள் வத்திக்கானில் தொடர்ந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


பிப்.15,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் தன் பணிகளைத் துவக்கி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்புதனன்று வெளியான இவ்விதழின் முதல் பக்கச் செய்தியாக திருத்தந்தையின் இந்த தொடர்ந்த சேவை விளக்கப்பட்டுள்ளது.
Munich உயர்மறைமாவட்டத்தின் பேராயராக இருந்த கர்தினால் ஜோசப் ராட்சிங்கர், அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப 1982ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அப்பொறுப்பிலிருந்து விலகி வத்திக்கான் வந்தடைந்தார் என்று இச்செய்தி எடுத்துரைக்கிறது.
திருப்பீடத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கர்தினால் ராட்சிங்கர், 2005ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேரும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றினார்.
1927ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருத்தந்தை, தன் 24வது வயதில் குருவாகவும், 50வது வயதில் Munich பேராயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். பேராயராகப் பொறுப்பேற்ற அதே 1977ம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தை முதாலாம் ஜான்பால், மற்றும் இரண்டாம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரைத் தெரிவு செய்த கர்தினால்கள் அவையில் கர்தினால் ராட்சிங்கரும் பங்கேற்றார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறையடி சேர்ந்தபின் நடைபெற்ற கர்தினால்கள் அவையில் கர்தினால் ராட்சிங்கர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16ம் பெனடிக்ட் என்ற பெயருடன் தற்போது திருஅவையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த 30 ஆண்டுகள் வத்திக்கானில் தொடர்ந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்று வத்திக்கான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.