2012-02-15 15:42:01

அமெரிக்க உயர் அரசு அதிகாரி : ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்


பிப்.15,2012. இலங்கையில் போருக்கு பின்னர் அரசுத்தலைவரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகளை அமல்படுத்த இலங்கைக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் வரும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான சார்நிலைச் செயலர் மரியா ஒட்டேரா கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதைத் தெரிவித்தார்.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளை பாராட்டியுள்ள ஒட்டேரோ, அக்குழுவின் பரிந்துரைகளில் சில குறைபாடுகள் இருக்கின்ற போதிலும், பல முக்கிய விடயங்களில் அது கவனம் செலுத்தியிருப்பதாகவும், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, இராணுவ மயமாக்கலை குறைப்பது மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் போன்ற விடயங்களில் அது கணிசமான பரிந்துரைகளைச் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசுத்தலைவர் தம்மிடம் கூறியுள்ளதாகவும் ஒட்டேரோ குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் காலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிக உயர்ந்த அமெரிக்க அரசு அதிகாரி மரியா ஒட்டேரோ என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.