மணமுறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே என்கிறது ஆய்வு
பிப்.14,2012. இன்றைய உலகில் மணமுறிவுகள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் அதிக அளவில்
பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே என்கிறது அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று. திருமணம்
மற்றும் மதம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் அண்மையில் 'குழந்தைகளின்
மீது மணமுறிவுகளின் பாதிப்பு' என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மணமுறிவுகளால்,
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவே முதலில் பாதிக்கப்படும் ஒன்று எனக்கூறும்
இந்த ஆய்வு, மணமுறிவுப் பெற்ற தாயுடன் வாழும் குழந்தைகளுள் 40 விழுக்காட்டினர் பெருமளவில்
இதன் பாதிப்புகளை அனுபவிப்பதாகவும், பாதிக்கப்படும் குழந்தைகளுள் பெரும்பான்மையினோர்
தங்கள் விசுவாசத்தை இழப்பதாகவும் தெரிவிக்கிறது. மணமுறிவு பெறும் பெற்றோரின் குழந்தைகள்,
கல்வியறிவு பெறுவதிலும் பின்தங்கியிருப்பதாக அண்மை ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க ஐக்கிய
நாட்டில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின்படி, மணமுறிவு பெற்ற குடும்பங்களில் வாழும் குழந்தைகளுள்
33 விழுக்காட்டினரே கல்லூரி படிப்பை நிறைவு செய்வதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரு சமூகத்தில்
மணமுறிவுகளால் குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பம், திருச்சபை, பள்ளி, அரசு போன்றவைகளும்
பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும்
கூறப்பட்டுள்ளது.