பிப்.10,2012. தென்துருவத்திலுள்ள அண்டார்ட்டிக் பகுதியில் உறைந்த நிலையில் உள்ள பனிப்படலத்துக்குக்
கீழே நான்கு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளையிடும் தங்களது திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக
இரஷ்ய அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். வெள்ளைக் கண்டம் என்றழைக்கப்படும், அண்டார்ட்டிக்
பனிப் பகுதியில், உறைநிலையிலுள்ள பனிப்படலங்களுக்கு கீழே 300க்கும் அதிகமான ஏரிகள் இருப்பதாக
அறியப்படும் நிலையில், ஓர் ஏரியில் இந்த அளவுக்கு ஆழமாகத் துளையிடப்படுவது இதுவே முதல்
முறை என்று அந்த அறிவியலாளர்கள் கூறினர். அண்டார்ட்டிகாவின் உறைநிலை வரலாறு மற்றும்
சூரிய மண்டலத்தில் வேறெங்கெல்லாம் உயிரினம் இருக்கக் கூடும் என்பதை, இந்த ஏரிகள் மூலம்
அறிந்து கொள்ள முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அண்டார்ட்டிகாவில்
கடந்த சில பத்தாண்டுகளாக எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
அதிலும் குறிப்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட இரஷிய ஆய்வு மையமான வோஸ்டாக் நிலையம், அக்கண்டத்தின்
மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.