இரு கொரிய நாடுகளிலும் பிரிந்து வாழும் குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு வழிகள் அமைக்கப்பட
வேண்டும்
பிப்.09,2012. வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே தற்போது நிலவும் உறவு மிகவும்
நலிவடைந்துள்ளது என்றும், இதை விரைவில் சரிசெய்வதே இரு நாடுகளுக்கும் நல்லது என்றும்
இவ்விரு நாடுகளின் சமுதாய மற்றும் மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Gwangju
உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Hyginus Kim Hee-joong உட்பட 100க்கும் அதிகமான சமுதாய மற்றும்
மதத்தலைவர்கள் அண்மையில் இணைந்து வந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு கொரிய நாடுகளிலும்
பிரிந்து வாழும் குடும்பங்கள் மீண்டும் இணைவதற்கு வழிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும்
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிறரன்புப் பணிகள் தொடரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இரு
கொரிய நாடுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக, 2000ம் ஆண்டில் இரு நாடுகளும் மேற்கொண்ட
பேச்சுவார்த்தைகளில் கூறப்பட்ட பல அம்சங்கள் நாளடைவில் மறைந்து விட்டன என்றும், இவைகளை
மீண்டும் புதுப்பிப்பது இருநாடுகளுக்கும் சிறந்தது என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு
நாடுகளும் தவறுகள் இழைத்துள்ளன, எனவே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதன் மூலமே இரு நாடுகளும்
மீண்டும் இணைய முடியும் என்று தேசிய கிறிஸ்தவ சபைகளின் நீதி மற்றும் அமைதிக் குழுவின்
தலைவர் அருள்திரு Lee Hae-hak கூறினார்.