2012-02-08 15:37:21

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


பிப் 08, 2012. ஐரோப்பா முழுவதும் பல நாட்களாக தொடர்ந்து பனி கொட்டிக் கொண்டேயிருக்க, இத்தாலியின் பெரும்பகுதியும் பனியால் மூடப்பட்டிருக்க, உரோம் நகர் மட்டுமே தப்பி வந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கனவை தகர்த்துப் போட்டது, கடந்த வெள்ளி நண்பகல் முதல் சனி அதிகாலை வரை பெய்த பனிப்பொழிவு. 1986ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின், அதாவது 26 ஆண்டுகளுக்குப் பின் இவ்வளவு பெரிய அளவில் உரோம் நகரில் பனி பெய்தது இப்போதுதான். பள்ளிகளும் உரோம் நகராட்சி அலுவலகங்களும் மூடப்பட்டு இப்புதன் தான் திறந்தன. மக்களின் இயல்பு வாழ்வு ஓரளவு திரும்பியுள்ள நிலையில், திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தில் பங்குகொள்ள வந்திருந்த திருப்பயணிகளின் கூட்டமும் வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தை நிறைத்திருந்தது.
"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" என இயேசு சிலுவையில் தொங்கியபோது விடுத்த அறைகூவல் குறித்து இன்று தியானிப்போம் என இவ்வார புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். நண்பகலில் நாடெங்கும் இருள் உண்டாகி அது மூன்று மணி நேரம் நீடித்த பின் இவ்வார்த்தைகளை உச்சரிக்கிறார் இயேசு. இருள் என்பது விவிலியத்தில் இருவேறு அடையாளங்களாக காட்டப்பட்டுள்ளது. தீயோனின் சக்தியின் அடையாளமாக பலவேளைகளில் காட்டப்பட்டுள்ள இருள், இறைவனின் மறைபொருளான பிரசன்னத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, மலை மீது மோசேக்கு இறைவன் தோன்றியபோது மோசே இருண்ட மேகத்தால் சூழப்பட்டதையும், கல்வாரியில் இயேசு இருளால் சூழப்பட்டதையும் குறிப்பிடலாம். தந்தையாம் இறைவனின் இருப்பு அங்கு இல்லை என்பது போல் தோன்றினாலும், சிலுவையில் அன்பு காணிக்கையான மகனின் மீது அவரின் அன்புப் பார்வை மறைவடக்கமான வழியில் இருந்தது. சிலுவையில் தொங்கிய வேளையில் இயேசுவின் இந்த அறைகூவல் நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பாடல் 22ன் துவக்க வார்த்தைகளான இவை, அந்தத் திருப்பாடலின் முழுக் கருப்பொருளையும் வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அதாவது, எத்தனை துன்பங்கள் மத்தியிலும் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையையும், அவர்களிடையே காணப்படும் இறைப் பிரசன்னத்தையும், அவர்களின் கூக்குரலுக்கு அவர் செவிமடுத்து பதிலளிப்பதையும் இத்திருப்பாடல் உணர்த்துகிறது. இறக்கும் தறுவாயில் இயேசு செபித்த இந்தச் செபம், நாமும் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்காக நம்பிக்கையுடன் செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது. இந்தச் செபத்தின் வழி நம் சகோதர சகோதரிகளும், தங்களை எப்போதும் கைவிடாத இறைவனின் அன்பு குறித்து அறிந்துகொள்வார்களாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, கடந்த வாரத்தில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பெரும் பனிப்பொழிவால் விளைந்த பெரும் இடற்பாடுகளையும் பொருட்சேதங்களையும் குறிப்பிட்டு, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தக் கடும் குளிரினால் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, இந்தத் துன்ப காலத்தில், துயருறும் மக்களுக்கு மற்றவர்களின் ஒருமைப்பாட்டுணர்வு, தாராள மனப்பான்மை போன்றவைகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
பொதுமறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.