2012-02-08 16:01:04

கொலம்பியாவின் FARC வன்முறையான தீவிரவாதக் குழு - கொலம்பிய ஆயர் பேரவை கண்டனம்


பிப்.08,2012. கொலம்பியா நாட்டில் FARC என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய புரட்சிப் படைகள் என்ற குழு அரசியல் குழு அல்ல, மாறாக அது வன்முறையான தீவிரவாதக் குழு என்று கொலம்பியா ஆயர் பேரவை கூறியுள்ளது.
கொலம்பியாவில் இத்திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெற்று வரும் கொலம்பிய ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயர்கள், FARC என்ற குழுவினர் அந்நாட்டில் விளைவித்து வரும் வன்முறைகளைக் கண்டித்து, தங்கள் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
பல்வேறு வகைகளிலும் பாகுபாடுகள் மலிந்துள்ள கொலம்பிய நாட்டின் சமுதாயத்தில் மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் FARC போன்ற அமைப்புக்கள் கண்டனத்திற்குரியது என்று ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Ruben Salazar Gomez கூறினார்.
சமுதாயத்தில் உள்ள அநீதிகளைக் களைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், கண்மூடித்தனமான வன்முறைகளில் ஈடுபடும் FARC போன்ற அமைப்புக்கள் சமுதாய அநீதிகளுக்குத் தகுந்த தீர்வு அல்லவென்றும் ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.