கிழக்கு Timorஐச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக
இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்
பிப்.08,2012. கிழக்கு Timor நாட்டைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக
இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, இந்தோனேசியாவில் இஸ்லாமிய வழியில் கல்வி பயில்வதற்கு
நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்று இந்தோனேசியாவில் இருந்து வெளியான திருஅவை செய்திகள்
கூறுகின்றன. 1999ம் ஆண்டு கிழக்கு Timor தனது சுதந்திரத்திற்காக போராடியபோது, அந்த
வன்முறைகளில் இருந்து தப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரம் மக்களில் 4000
குழந்தைகளும் அடங்குவர். இக்குழந்தைகளில் 1000க்கும் அதிகமானோர் தற்போது மேற்கு ஜாவாவில்
இஸ்லாமிய கல்விக் கூடங்களில் உள்ளனர் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தற்போது
இளம் பருவத்தை அடைந்துள்ள இவர்களை மீண்டும் அவரவர் குடும்பங்களுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட
பல முயற்சிகளும் இஸ்லாமிய அமைப்புக்களால் தடுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தோனேசிய ஆயர்
பேரவையின் பல்சமய உரையாடல் பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை Benny Susetyo, Fides நிறுவனத்திடம்
கூறியுள்ளார். இவ்விளையோரை விடுவிக்க அரசுசாரா அமைப்புக்களும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர்
பணிக்குழுவும் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் தரவில்லை என்று Fides செய்திக் குறிப்பு மேலும்
கூறுகிறது.