2012-02-07 16:05:42

கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 ஆண்டுகள் தேவை


பிப்.07,2012. இலங்கையின் வடக்கே போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்ட நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை, தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை மையத்தின் தகவல்களின்படி வடக்கில் இன்னும் 126 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றது.
கண்ணிவெடிகள் முழுவதுமாக அகற்றப்படாத காரணத்தினால் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 6,700 பேர், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இன்னும் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2009 ம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி முதல், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 554 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் அறிக்கையொன்று கூறுகின்றது.
கண்ணிவெடி விபத்துக்களில் கடந்த 2010ம் ஆண்டு 47 பேர் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை, அவ்வெண்ணிக்கை, கடந்த வருடம் 24 ஆகக் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.