இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 கோடி வீடுகள் தேவைப்படும்
பிப்.06,2012. இந்தியர்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 50 கோடி வீடுகள் தேவைப்படும் என
இந்தியத் தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்துப்
பேசிய, இந்திய தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கழகக் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் பூரி,
வரும் 2050ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அப்போது நகர்ப்புறங்களில்
மட்டும், 90 கோடி மக்கள் வாழும் நிலை ஏற்படும். இதைக் கணக்கிடும் போது, அடுத்த 10 ஆண்டுகளில்
நகர்ப்புறங்களில் 50 கோடி புதிய வீடுகள் தேவைப்படும் என்று தெரிவித்தார். நகர்ப்புற
உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய நிதி வசதியில்லாததால் சந்தை, நடைபாதை, விளையாட்டுத்திடல்,
குடியிருப்பு, பாலம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு முடிவதில்லை. எனவே, ஜவகர்லால் நேரு தேசிய
நகர்ப்புற புத்தாக்க அமைப்பு மூலம் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில்
கட்டுமான பணிகளை ஒப்பந்தம் விடும் அரசு, இனி அந்த கட்டுமானங்களைப் பராமரிக்கவும் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதீப் பூரி கூறினார்.