பிப்.04,2012. புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால், அந்நோயினால் உலகில் ஒவ்வோர் ஆண்டும்
இடம் பெறும் சுமார் 80 இலட்சம் இறப்புக்களைக் குறைக்க முடியும் என்று WHO என்ற உலக நலவாழ்வு
நிறுவனம் கூறியது. பிப்ரவரி 4ம்தேதியான இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலகப்
புற்றுநோய் தினத்தையொட்டி இவ்வாறு தெரிவித்த WHO நிறுவனம், நலமாக வாழ்வோருக்கு அவ்வப்போது
மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையை எளிதாக்க முடியும்
என்றும் கூறியது. உலகில் இடம் பெறும் இறப்புக்களில் சுமார் 13 விழுக்காட்டிற்குப்
புற்றுநோய் காரணம் எனவும், 2008ம் ஆண்டில், 76 இலட்சம் பேர் புற்றுநோயால் இறந்தனர் எனவும்
WHO கூறியது. “ஒன்று சேர்ந்தால் இயலக்கூடியதே” என்ற தலைப்பில், WHO நிறுவனமும், அதனோடு
தொடர்புடைய பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனமும் சேர்ந்து இவ்வுலக நாளைக் கடைபிடித்தன.