2012-02-04 15:23:57

பிப்ரவரி 17, அனைத்துக் கர்தினால்களுடன் திருத்தந்தை செபம், சிந்தனை


பிப்.04,2012. திருஅவையில் புதிய கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 18ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்துக் கர்தினால்கள் மற்றும் புதிதாகக் கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து, அதற்கு முந்தைய நாளை, செபம் மற்றும் சிந்தனை நாளாகக் கடைப்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 17ம் தேதி காலை 10 மணிக்குத் திருப்புகழ்மாலை செபத்துடன் ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு, திருப்புகழ்மாலை செபத்துடன் இந்நாள் நிறைவடையும்.
“இன்று நற்செய்தி அறிவித்தல், திருஅவையின் மறை அறிவிப்பும் புதிய நற்செய்திப்பணியும்” என்ற தலைப்பில் இச்செப நாள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாகக் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள 22 பேரில் ஒருவரான இயேசு சபை அருள்தந்தை Karl Josef Becker, உடல்நலம் காரணமாக, இம்மாதம் 18ம் தேதியன்று இடம் பெறும் நிகழ்வில் கர்தினாலாக உயர்த்தப்படமாட்டார், ஆனால் வேறொரு நாளில் அவர் கர்தினாலாக உயர்த்தப்படும் திருவழிபாடு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.