கடந்த 15 ஆண்டுகளில் 10 இலட்சம் கருக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளனர்
- தென்னாப்ரிக்க ஆயர் பேரவை
பிப்.02,2012. தென்னாப்ரிக்காவில் கருக்கலைப்பு சட்டப் பூர்வமாக்கப்பட்ட பின்னர், கடந்த
15 ஆண்டுகளில் 10 இலட்சம் கருக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை இழந்துள்ளன என்று தென்னாப்ரிக்க
ஆயர் பேரவையின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தென்னாப்ரிக்காவில்
சட்டத்திற்குப் புறம்பான, ஆபத்தான கருக்கலைப்புகள் நடைபெற்று வந்ததைத் தடுக்கும் வண்ணம்
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இந்தச் சட்டத்தால், உண்மையான பயன்கள் விளைந்துள்ளனவா
என்ற கேள்வியை எழுப்பி, Johannesburg பேராயரும், தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் தலைவருமான
பேராயர் Buti Tlhagale, ஆயர்கள் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கருக்கலைப்பு
சட்டப்பூர்வமாக்கப்பட்டாலும், கத்தோலிக்கத் திருஅவையின் கண்ணோட்டத்தில் அது எப்போதும்
நன்னெறிக்கு முரணானது என்பதை ஆயர்களின் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. கருக்கலைப்பு
அவரவர் தனிப்பட்ட உரிமை என்று வலியுறுத்தும் அரசு, கருக்கலைப்பு மனசாட்சிக்கு எதிரானது
என்று உணரும் ஒருவர் அந்தச் செயலில் ஈடுபட மறுக்கும்போது, அதையும் அரசு ஒருவரது அடிப்படை
உரிமை என்று மதிக்க வேண்டும் என்று பேராயர் Tlhagale சுட்டிக்காட்டினார்.