பிப்.01,2012. இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி
ஆனந்த மெண்டிஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடுநிலையோடு, அச்சமின்றி
நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால்,
தான் இந்தத் தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக மெண்டிஸ் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார். மனித
உரிமைகளுக்கான மிகச்சிறந்த ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கை
அரசுத்தலைவரின் கோரிக்கையின் பேரில் தான் ஆணைக்குழுவில் இணைந்து கொண்டதாகவும், ஆனால்
அந்த இலக்கை அடைய முடியாதபடி பல்வேறு இடையூறுகள் தனக்கு இருந்ததாகவும் அவர் பிபிசியிடம்
தெரிவித்தார். ஆணைக்குழுவுக்குள் இருக்கும் தன்னால் பெயர் குறிப்பிட்டுக் கூற முடியாத
நபர்களின் செயல்பாடுகளே தனது பணிகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் தனது பதவி விலகல் அரசுத்தலைவரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக
இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் பிபிசியிடம் குறிப்பிட்டார்.