உண்ணாநோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன நாகாலாந்து கிறிஸ்தவ சபைகள்
சன.31,2012. இந்தியாவின் நாகாலாந்து மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் நோக்கில்,
வரும் ஞாயிறை உண்ணாநோன்பு மற்றும் செபத்தின் நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க வேண்டும்
என அழைப்பு விடுத்துள்ளது நாகாலாந்து கிறிஸ்தவ சபைகளின் அவை. பிரச்னைகளுக்குத் தீர்வு
காண வேண்டுமெனில், முதலில் நம் பாவங்களுக்கான பரிகாரம் இடம்பெற வேண்டும் என்ற கிறிஸ்தவ
சபைகள், ஒரு நாள் முழுவதுமான உண்ணா நோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. நாகாலாந்து
மக்களின் அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முதலில் அம்மக்களும், தீவிரவாதிகளும்,
இந்திய அரசும் தங்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்பதை
வலியுறுத்தும் இந்த அறிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு கையாளும் விதம் குறித்து
மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது.