2012-01-28 15:55:15

உலகின் சிறாருக்கு உதவுவதற்கென சுமார் 130 கோடி டாலருக்கு யுனிசெப் வேண்டுகோள்


சன.28,2012. 25க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிறாருக்கு 128 கோடி டாலர் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யுனிசெப்.
ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளின் சிறாருக்குப் பெருமளவான நிதியுதவி தேவைப்படுகிறது என்று ஜெனீவாவில் இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட யுனிசெப் கூறியது.
இதற்கிடையே, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில், பசியினால் தினமும் 100 முதல் 200 சிறார் வரை இறக்கின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஆண்டில் இப்பகுதியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குறைந்தது 35 ஆயிரம் சிறார் பசியினால் இறந்தனர், இவ்வெண்ணிக்கை 65 ஆயிரமாகக்கூட இருக்கலாம் என்று மனிதாபிமான நிறுவனங்கள் கூறுகின்றன.
சொமாலியாவில் மட்டும், மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்துக் குறைவால் துன்புறுகின்றனர்.
மேலும், பசிக்கொடுமையினால், சொமாலியா, கென்யா, எரிட்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து அகதிகள் முகாம்களுக்குக் குடும்பங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றும் மனிதாபிமான நிறுவனங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.