ஆயர்கள் கூட்டம் : சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதில் தலத்திருஅவையின் பங்கு
சன.28,2012. “நல்ல வழிகளைச் சுட்டிக் காட்டுவதில் திருஅவையின் பங்கு” என்ற தலைப்பில்,
வருகிற பிப்ரவரி ஒன்று முதல் 8 வரை, இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. பெங்களூரின்
புனித ஜான் தேசிய நலவாழ்வு மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், இலத்தீன், சீரோ-மலபார்,
சீரோ- மலங்கரா ஆகிய மூன்று ரீதிகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட ஆயர்களும், திருப்பீட
நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் போன்ற முக்கிய பிரமுகர்களும்,
இந்திய வல்லுனர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சமுதாயத்தில்
நற்செய்தி விழுமியங்களைப் பரப்புவதற்குப் புதிய யுக்திகளையும் கொள்கைகளையும் அமைப்பது,
உலகாயுதப் போக்கு, மதத் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவைகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்குப்
பதில் சொல்வது போன்றவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். இளையோருக்கு நற்செய்தி அறிவித்தல்,
இந்து மற்றும் இசுலாம் தீவிரவாதிகளால் நடத்தப்படும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைக்குத்
தீர்வு போன்ற தலைப்புகள், இக்கூட்டத்தில் சிறப்பாக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக்
கத்தோலிக்க ஆயர்களின் இத்தகைய கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.