சான் எஜிதியோவின் பிறரன்புப் பணிகளைப் பாராட்டுகிறார் பிலிப்பீன்ஸ் தூதுவர்
சன.26,2012. இத்தாலியில் விபத்துக்குள்ளான Costa Concordia உல்லாசக் கப்பலில் பணியாற்றிய
வெளிநாட்டவர்களுக்கு உடனடியாக வந்து உதவிகளைப் புரிந்ததற்காக சான் எஜிதியோ என்ற கத்தோலிக்கப்
பிறரன்பு அமைப்பிற்குத் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருப்பீடத்திற்கான பிலிப்பீன்ஸ்
தூதுவர். கப்பல் விபத்துக்குள்ளாகிய போது பலர் வெளியேற உதவிய இந்த வெளிநாட்டுபணியாளர்களுள்
180 பிலிப்பீன்ஸ் நாட்டவர்களும் 170 இந்தோனேசியர்களும் எவ்வித உதவிகளும் மாற்று உடைகளும்
இன்றி தவித்தபோது கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ அமைப்பு சென்று, அவர்களை
சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவியது குறிப்பிடத்தக்கது. உதவி என அழைப்பு விடுக்கப்பட்ட
சில மணி நேரத்திலேயே காலணிகள், போர்வைகள், மேலங்கிகள் என, பல அத்தியாவசியப் பொருட்களை
அனுப்பி உதவியது இவ்வமைப்பு.