திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தேவை
சன.25,2012. மறை அறிவிக்கும் பணியானது, எல்லாக் கண்டங்களிலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவர் மற்றும்
ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய கடமையாகும் என்று திருத்தந்தை சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாண்டு
உலக மறைபரப்பு தினத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “நான் நற்செய்தியை
அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!”(1கொரி.9 :16) என்ற புனித பவுலின் வார்த்தைகள் ஒவ்வொரு
கிறிஸ்தவரிலும் ஆழமாக ஒலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மறைபோதகத்தளங்கள்,
இளம் திருஅவைகள், அண்மையில் உருவாக்கப்பட்ட மறைப்பணித்தளங்கள், மறைப்பணியாளர்கள் இன்னும்
தேவைப்படும் இடங்கள் என அனைத்து இடங்களும் மறைப்பணிப் பண்பைக் கொண்டுள்ளன எனக் கூறியுள்ளார்
திருத்தந்தை. உலகின் பல பகுதிகளிலிருந்து பல அருட்பணியாளரும் இருபால் துறவியரும்,
பல பொதுநிலையினரும், ஏன் முழுக்குடும்பங்களுமே தங்களது நாடுகளை விட்டு விட்டுப் பிற திருஅவைகளுக்குச்
சென்று கிறிஸ்துவின் பெயரை அறிவித்து அதற்குச் சாட்சிகளாக இருக்கின்றனர், இச்செயலானது,
திருஅவைகள் மத்தியில் ஆழமான உறவையும் அன்பையும் பகிர்வையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது
என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது. மிகவும் ஏழ்மையில் வாடுவோருக்கு நீதி,
ஒதுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு, ஒதுக்குப்புறங்களில் வாழ்வோருக்கு மருத்துவ உதவி, கிராமங்களில்
கல்வி பெற வாய்ப்புகள் எனப் பல பிறரன்புப் பணிகளும் இந்நற்செய்தி அறிவிக்கும் பணியில்
செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற
தலைப்பில் வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்தில், ஆசியா, ஆப்ரிக்கா,
இலத்தீன் அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பிரதிநிதிகள்
கலந்து கொண்டு தங்களது வளமையான மறைப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும்
திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார். மேற்கத்திய உலகில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தில்
பெருமளவில் ஏற்பட்டுள்ள விசுவாச நெருக்கடி, நற்செய்தி அறிவிப்புக்கான ஆர்வத்துக்கு முன்வைக்கும்
தடைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும் உலக மறைபரப்புத் தினச் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ள
திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தேவை என்றும்
கூறியுள்ளார். வருகிற அக்டோபர் 21ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு தினத்திற்கானத்
திருத்தந்தையின் செய்தி இப்புதனன்று வெளியிடப்பட்டது.