அனைத்து மக்களும் சக்திகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க
வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்
சன.17,2012. எதிர்காலத்தின் சக்தியைக் குறித்து சிந்திக்கும் நாம் அனைத்து மக்களும் சக்திகளைப்
பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச்
செயலர் பான் கி மூன் கூறினார். தேவைகளுக்கு உட்பட்ட வகையில் பயன்படுத்தி பாதுகாக்கக்கூடிய
சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் 2012ம் ஆண்டு, அகிலஉலக பாதுக்கக்கக்கூடிய
சக்தி ஆண்டென ஐ.நா. அறிவித்துள்ளது. இந்த அகில உலக ஆண்டை அபுதாபியில் நடைபெறும் ஒரு பன்னாட்டு
கருத்தரங்கில் அதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்த பான் கி மூன், சக்தியைப் பற்றிய ஆய்வுகள்
அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் இவ்வாறு கூறினார். இத்திங்கள்
முதல் வியாழன் வரை அபுதாபியில் நடைபெறும் உலக எதிர்காலச் சக்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய
ஐ.நா.பொதுச் செயலர், மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு உலகின் சக்திகளை நாம் பயன்படுத்தும்
வழிகள் மிகவும் முக்கியமான ஒரு வழி என்று கூறினார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும்,
சுற்றுச்சூழலை தகுந்த வகையில் பயன்படுத்தவும் அடிப்படையாக இருப்பது நாம் பயன்படுத்தும்
சக்திகளே என்று பான் கி மூன் சுட்டிக்காட்டினார். குறைந்த விலையில் எரிசக்தியை மக்களுக்குத்
தரக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நமக்கு அவசரமாகத் தேவை என்று இந்த மாநாட்டின்
தலைவர் Nassir Abdulaziz Al-Nasser கூறினார். உலகில் இன்று வாழும் மனிதர்களில் ஐந்தில்
ஒருவர் மின்சக்தி இல்லாமல் வாழ்கின்றனர் என்றும், 300 கோடிக்கும் அதிகமான மக்கள் சமைப்பதற்கு
விறகு, கரி, மிருகக் கழிவுகள் ஆகியவற்றையே எரிசக்தியாகப் பயன்படுத்துகின்றனர் என்றும்
ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.