2012-01-12 15:02:21

கந்தமால் வன்முறைகளுக்கு ஒடிசா மாநில அரசும் உடந்தை


சன.12,2012. ஒடிசாவின் கந்தமால் பகுதியில் 2007ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு ஒடிசா மாநில அரசும் உடந்தையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
கந்தமால் கலவரங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நீதிபதி சரத் சந்திர மோகபத்ரா ஆய்வுக் குழுவின் முன் இத்திங்களன்று பேசிய ஒடிசாவின் முன்னாள் நீதித் துறை அமைச்சர் நரசிங்க மிஷ்ரா, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை ஒடிசா அரசு தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இந்த ஆய்வுக் குழுவின் முன் தான் இன்னும் அதிக தகவல்களைச் சமர்பிக்க முடியும் என்று மிஷ்ரா கூறியதால், இந்த விசாரணை மார்ச் மாதம் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நரசிங்க மிஷ்ராவைப் போன்ற ஓர் உயர் அரசியல் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது வன்முறைகளைத் தாங்கிவரும் கிறிஸ்தவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றும், இந்த வாக்குமூலம் அரசின் தரப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள குழுவின் மீது தாக்கங்களை உருவாக்கும் என்றும் கட்டக் புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமுதாயப் பணி இயக்குனர் அருள்தந்தை மனோஜ் குமார் நாயக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.