2012-01-12 15:02:35

ஒவ்வொரு நாடும் முன்னேற்றப் பாதையைப் பற்றிய தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்


சன.12,2012. இந்த ஆண்டு ஜூன் மாதம் ரியோ நகரில் நடைபெற உள்ள Rio+20 என்ற அனைத்துலக உச்சி மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து செயலாற்றக்கூடிய முன்னேற்றப் பாதையைப் பற்றிய தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
வளரும் நாடுகள் G-77 என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ள 130 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சீனப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இப்புதனன்று பேசிய பான் கி மூன், ஜூன் மாதம் ரியோ நகரில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி மீண்டும் நினைவு படுத்தினார்.
1964ம் ஆண்டு 77 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட G-77 என்ற உலகளாவிய இந்த அமைப்பில் தற்போது 130 நாடுகள் உள்ளன. இது ஐ.நா.வின் அங்கத்தினர் நாடுகளில் இரண்டில் ஒரு பங்கு என்றும், இந்நாடுகளில் உள்ள மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 60 விழுக்காடு என்றும் கணிக்கப்படுகிறது.
மில்லேன்னிய இலக்குகளை அடைதல் என்ற திட்டங்களின் ஒரு பகுதியாக விளங்கும் வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தில் G-77 நாடுகள் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு உலக சமுதாயம் வகுத்துள்ள 2015 என்ற காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், இந்த இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கு உலக நாடுகள் இன்னும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.