புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் தனியாக இல்லை, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆயர்கள் உறுதி
சன.10,2012. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் தனியாக இல்லை, அவர்களுக்காக மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள்
செபிக்கிறார்கள், அவர்களைத் தாங்கள் மறக்கவில்லை என்ற உறுதியை வழங்கியுள்ளனர் ஐரோப்பிய
மற்றும் வட அமெரிக்க ஆயர்கள். புனிதபூமிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய
மற்றும் வட அமெரிக்க ஆயர்கள், பாலஸ்தீனாவின் காசாவில் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவன்று
திருப்பலி நிகழ்த்திய போது இவ்வாறு புனிதபூமிக் கிறிஸ்தவர்களிடம் தெரிவித்தனர். இத்திருப்பலியின்
இறுதியில் பேசிய பிரான்சின் Evry ஆயர் Michel Dubost, பிரான்சின் புறநகர்ப் பகுதியிலுள்ள,
ஐரோப்பாவிலே பெரிய சிறையான Evry சிறையைப் பார்வையிட்ட போது அங்குள்ள கைதிகளிடம், புனிதபூமிக்
கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறுக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். காசாவின்
சுமார் 15 இலட்சம் மக்களில் 2,500 பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் 300 பேரே கத்தோலிக்கர்.