ஹாங்காங் ஆயர் Tong, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும்
இடையேயான உறவில் ஹாங்காங் மறைமாவட்டத்தின் பங்கை அங்கீகரிப்பதாக இருக்கின்றது
சன.07,2012. ஹாங்காங் ஆயர் John Tong Hon, கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஹாங்காங்
மறைமாவட்டம், சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவில் இணைக்கும் பாலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையே
காட்டுகின்றது என்று சீனத் திருஅவை விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையால்
கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள 72 வயதாகும் ஆயர் Tong, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும்
இடையேயான உறவு குறித்த விவகாரங்களில் வல்லுனர் ஆவார். ஆயர் Tong ன் நியமனம் குறித்துக்
கருத்து தெரிவித்த, பாப்பிறை மறைபோதக நிறுவனத்தின் அருள்தந்தை Gianni Criveller, சீனாவுக்கும்
திருப்பீடத்துக்கும் இடையேயான உறவின் முக்கியத்துவத்தை இந்நியமனம் காட்டுகின்றது என்று
கூறினார். அத்துடன், இந்நியமனம், ஹாங்காங் மறைமாவட்டத்திற்கு நல்ல செய்தியாக இருக்கின்றது
என்றும் அக்குரு குறிப்பிட்டார். இந்தியாவின் சீரோ மலபார் ரீதி திருஅவைத் தலைவர் பேராயர்
ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 18 பேராயர்கள், ஓர் ஆயர் 3 அருள்தந்தையர் என 22 பேரை இவ்வெள்ளிக்கிழமை
கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர்களில் திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 18 பேர்.