2012-01-07 13:57:40

"45 வயது முதலே மூளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன"- புதிய ஆய்வு


சன.07,2012. நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் உள்ளிட்ட மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பேயேகூடக் குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ பத்திரிகையில் தங்களது ஆய்வு முடிவுகளைப் பிரசுரித்துள்ள பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மூளைத் திறன்களை வைத்து இந்த முடிவைக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மூளையின் திறன்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துவரும் நிலையில், ஒருவர் வயதாகும்போது அவரது மூளையின் திறன்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விளங்கிக் கொள்வது என்பது இந்த நூற்றாண்டில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகின்றனர்.
45 வயது முதற்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டன் அரசு ஊழியர்களைப் பத்து வருட காலத்துக்குத் தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
மூளையின் திறன்கள் குறைந்துபோவது என்பது, அறுபது வயதில்தான் ஆரம்பிக்கிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சிறிய அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.
சிறு வயது முதலே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வதென்பது உடல் நலத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல் மூளையின் திறன்களைப் பேணுவதற்கும் அவசியம் என இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.